Sunday, 6 July 2014


பொதுவாக – மனித வாழ்வில் 13 வயதுமுதல் 19 வயதுவரையுள்ள வளரப்பருவம்” என அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதனை “டீன் – ஏன்” (Teen Age) என்று குறிப்பிடுவார்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த ‘டீன் – ஏஜ் பருவம்’ மிகவும் முக்கியமான பருவம் ஆகும். குழந்தைப் பருவத்திலிருந்து (Childhood) வளர்ந்து, இந்த ‘டீன் ஏஜ்’ பருவத்திற்கு மாறும்போது ஒரு குழந்தையின் மனநிலை பெருமளவில் மாறிவிடுகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவித வளர்ச்சிகளை இந்தநிலையில் இளம்வயதினர் காண்கிறார்கள்.

13 – வது வயது நடைபெறும்போது பொதுவாக 6 அல்லது 7 – வது வகுப்பில் ஒரு மாணவன் அல்லது மாணவி படிக்கும்நிலை உருவாகும். இந்தநிலையில் உடலிலுள்ள சில சுரப்பிகள் ஹார்மோன்களை சுரப்பதால் உடலில் ஏராளமான மாற்றங்கள் உருவாகிறது.

இத்தகைய மாற்றங்கள் எப்படி உருவாகின்றன? ஏன் உருவாகின்றன? உடல் ரீதியான மாற்றங்களை சந்திப்பது எப்படி? உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி? – என்பதுபோன்ற குழப்பங்கள் டீன் ஏஜ் பருவத்தினரின் மனதில் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் டீன் ஏஜ் பருவத்தினர் மனரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள். மனதளவில் அவர்களுக்கு பலவித பிரச்சினைகளும் உருவாகின்றன. ஒருபுறம் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இன்னொருபுறம் மனப் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு டீன் ஏஜ் பருவத்தினர் இயற்கையாகவே தள்ளப்பட்டுவிடுகின்றனர்.

“டீன் ஏஜ்” பருவத்துப் பிரச்சினைகள் எவை? அந்தப் பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் என்கின்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எளிதில் காணலாம்.

“டீன் ஏஜ்” பருவத்தில் இளைய உள்ளங்களின் மனதில் பலவிதமான கேள்விகள் உருவாகும். “இதுதான் சரி” என யாராவது சொன்னால் “அது எப்படி சரி என நீங்கள் சொல்லலாம்?” என்று எதிர் விவாதம் செய்ய மனம் தயாராக இருக்கும். “ஒருவரை நல்லவர்” என்று சிலர் அடையாளம் காட்டினால், அதை அப்படியே மறுத்து “அவர் நல்லவர் அல்ல” என்று அவதூறு பரப்ப மனம் துடிதுடிக்கும்.

வீட்டில் தனது சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு முதல் தடையாக இருப்பது அப்பாதான் என்று பெரும்பாலான டீன் ஏஜ் பருவத்தினர் அடையாளம் காட்டுவார்கள். அப்பா எதைச்செய்தாலும் அதற்கு “ஆமாம் சாமி” போடும் ஆசாமிதான் அம்மா என்று அம்மாவை கிண்டலடிக்கும் டீன் ஏஜ் பருவத்தினரும் உண்டு.

எதற்கெடுத்தாலும் “நீ செய்வது தவறு” – என்று என்னை சுட்டிக்காட்டுகிறார்கள். “இந்த உலகத்தில் நான் உயிரோடு இருப்பது வீண்தானா?” என்று தனியாக இருந்து அதிகமாக சிந்தித்து தவறான முடிவை எடுக்கும் டீன் ஏஜ் பருவத்தினரும் உண்டு.

மனதிற்குள் தேவையில்லாதவற்றை நினைத்து குழம்பும்நிலை இந்த டீன் ஏஜ் பருவத்தில் உருவாகும். “என்னை வீட்டில் ஒருவரும் மதிக்காமல் இருக்கிறார்கள்” என்று புலம்பி தனது தாழ்வு மனப்பான்மையை வௌல்ப்படுத்தும் டீன் ஏஜ் பருவத்தினரும் உண்டு.

சாதி அடிப்படையில் சில உணர்வுகளை உள்ளத்தில் நிரப்பி, அதன் அடிப்படையில் தங்கள் செயல்பாடுகளை வைத்துக்கொள்ளும் இளம்வயதினரும் உண்டு. மதம் பற்றிய தௌல்வான சிந்தனை இல்லாததால், “அந்த மதம் பெரிது. இந்த மதம் சரியில்லை” – என்று புலம்பும் நிலையோடு உலாவரும் டீன் ஏஜ் பருவத்தினரும் இருக்கிறார்கள்.

தான் நினைத்தது உடனே நடைபெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதால், தனது விருப்பத்திற்கு தடையாக நிற்பவர்களை எதிர்க்கவும், அவர்களோடு சண்டையிடவும் இந்த டீன் ஏஜ் பருவத்தினர் தயார்நிலையில் இருப்பார்கள்.

சிலவேளைகளில் விரக்தியான (Frustration) மனநிலையோடு இவர்கள் காணப்படுவார்கள். இதனால், தங்களைத் தாங்களே வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு மன அழுத்தத்தோடு (Depression) சிலவேளைகளில் சோகமான நிலையில் இருப்பார்கள். “நான்” என்கின்ற உணர்வு சற்று மேலோங்கி இருப்பதால் எவரையும் அலட்சியப்படுத்தும் எண்ணமும் அவ்வப்போது இவர்கள் மனதில் அரங்கேறும்.

“இவர் நமது மாமா” – என்று உறவைச்சொல்லி மரியாதை கொடுக்கச்சொன்னாலும் “உங்களுக்கு வேண்டுமென்றால் அண்ணணாக இருக்கலாம். அவர் எனக்கு மரியாதை தரவில்லையென்றால் அவர் உறவு எனக்கு தேவையில்லை” – என்று உறவுகளைக்கூட ஒதுக்கிவைக்கும் மனநிலையும் அவ்வப்போது “டீன் ஏஜ்” பருவத்தில் உருவாகும்.

தனது உடலை அழகாக்க வேண்டும் என்ற எண்ணம் “டீன் ஏஜ்” பருவத்தினருக்கு அதிகம் உண்டு. குறிப்பாக – தனது தலைமுடியை அழகுப்படுத்துவதற்கும், தனது உடல் தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், பருக்கள், பளபளப்பற்ற தன்மை போன்றவற்றை நீக்குவதற்கு இவர்கள் அதிகநேரத்தை செலவழிப்பார்கள். கண்ணாடியின் முன்நின்று தனது முகத்தைப் பார்த்து அதிகநேரம் ரசிப்பதற்கும் இவர்கள் அதிகமாக விரும்புவார்கள்.

“டீன் ஏஜ்” பருவத்திலுள்ள ஆண்களும், பெண்களும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருப்பதற்கு விரும்புவதில்லை. இவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் வைத்துக்கொண்டு எப்போதும் ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். திடீரென ஓடுவார்கள். தாவிக் குதிப்பார்கள். அருகில் ஒரு மரத்தைப் பார்த்தால் துள்ளி ஏறிவிடுவார்கள். கதவில் நாட்டியம் ஆடும் டீன் ஏஜ் பருவத்தினரும் உண்டு. இத்தகைய செயல்களெல்லாம் அவர்களை அறியாமலேயே நடைபெற்றுவிடுகின்றன. இப்படி “துறுதுறு” என்று வருபவர்களைப் பார்த்து “ஏய் உன் காலையும் கையையும் சும்மா வைத்துக்கொண்டு இருக்கமாட்டாயா?” – என்று மற்றவர்கள் கோபப்படும் #ழ்நிலையும் சிலவேளைகளில் உருவாகிவிடும்.

“டீன் ஏஜ்” பருவத்தினால் ஏற்படும் குழப்பம்தான் இது என்பதை புரிந்துகொண்டால் அவர்கள்மீது பெற்றோர்களும், மற்றவர்களும் கோபப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது.

“டீன் ஏஜ்” பருவத்தினருக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது தன்னை பிறர் மதிக்கவேண்டும் என்பதுதான். “நீ செய்வது சரிதான் என்று யாராவது பாராட்டினால், அவர்கள் பின்னால் ஒட்டிக்கொண்டு பாசமழையைப் பொழிய இவர்கள் காத்திருப்பார்கள். “இப்படியெல்லாம் நீ செய்யக்கூடாது” என்றால் எரிச்சலும், கோபமும் இவர்களுக்கு ஏறுவரிசையில் ஏறிவிடும்.

தன் வயதுபோலவே ஒரே வயதைக்கொண்டவர்கள் மத்தியில் தனக்குத் ‘தனி மரியாதை மற்றவர்கள் தரவேண்டும்’ என்று “டீன் ஏஜ்” பருவத்தினர் விரும்புகிறார்கள். மற்றவர்களின் பாராட்டுக்கு மனம் ஏங்குவதால், இவர்களை பெற்றோர்களும், மற்றவர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டுவதற்கான சந்தர்ப்பதை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ் பருவத்தினரிடம் அதிக கவனம் செலுத்துவதற்கு பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவது எப்படி? அடுத்தவர்களிடம் அன்பு பாராட்டுவது எப்படி? சகிப்புத்தன்மையோடு வாழ்வது எப்படி? வாழ்க்கை நெறிகளை பின்பற்றி செயல்படுவது எப்படி? உண்மையைப்பேசி உறவாடுவது எப்படி? சொல்லுக்கும், செயலுக்கும் ஒருங்கிணைப்பை உருவாக்குவது எப்படி? – என்ற கேள்விகளுக்கான விடைகளை விளக்கங்களாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவ்வப்போது வழங்க வேண்டும். ஏனென்றால் தனது உடல் பிரச்சினைகளோடு சிக்கலில் தவிக்கும் “டீன் ஏஜ்” பருவத்தினரின் மன குழப்பங்களையும் அப்போதுதான் பெற்றோர்களால் தீர்த்துவைக்க இயலும்.

தன்னோடு பழகும் நண்பர்களிடமும் வகுப்புத் தோழர்களிடமும் ஊர்க்காரர்களிடமும் சிறந்த முறையில் உரையாடுவதிலும், உறவாடுவதிலும் “டீன் ஏஜ்” பருவத்தினருக்கு பிரச்சினைகள் உருவாகிறது. இவ்வித பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு, போதிய பயிற்சிகளை “டீன் ஏஜ்” பருவத்தினர் மேற்கொள்ள வேண்டும்.

“டீன் ஏஜ்” பருவத்தினரின் “மன அழுத்தம்” (Stress) அவர்கள் பயிலும் பள்ளி – கல்லூரிகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, தேர்வு நேரத்தில் இவர்களின் “மன அழுத்தம்” உச்சநிலைக்கு வந்துவிடும். இதேபோல் வகுப்பில் ‘பிராஜெக்ட் ஒர்க்’, ‘அசைன்மெண்ட்’, ஹோம் ஒர்க்’ – போன்றவைகளும் அதிக மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. இதைப்போலவே நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், விளையாட்டு நேரத்திலும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு பிரச்சினைகள் உருவாகின்றன. இத்தகைய பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவியாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் தீர்வுகள் காண்பது (Problem Solving) எப்படி? என்னும் நுணுக்கத்தை “டீன் ஏஜ்” பருவத்தினருக்கு கற்றுத்தர வேண்டும்.

“பெற்றோர்களின் அதிகமானஎதிர்பார்ப்பு” (High Parental Expectations) டீன் ஏஜ் பருவத்தினருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துவிடுகிறது.

சில பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகள்மூலம் நிறைவேற்றுவதற்கு ஆசைப்படுகிறார்கள். “பிளஸ் – 2 படிக்கின்ற என் மகன் இன்ஜினியர் ஆக வேண்டும்? டாக்டர் ஆக வேண்டும்? 200க்கு 200 மதிப்பெண்கள் பெற வேண்டும்” – என்றெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சில பெற்றோர்கள் மனதிற்குள் வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் முழுமூச்சாக ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

“நீ காலையில் 4 மணிக்கு எழுந்து படிக்கவேண்டும்”.

“நீ டீ.வி. பார்க்கக்கூடாது”.

“இன்டர்நெட் பார்த்து நேரம்போக்கக்கூடாது”.

“டியூஷனுக்கு கண்டிப்பாக போகவேண்டும்” – இப்படி சில கட்டளைகளை பெற்றோர்கள் உருவாக்குகிறார்கள். இந்த கட்டளைகள் டீன் ஏஜ் பருவத்தினருக்கு கண்டிப்பான கட்டுப்பாடாக மாறிவிடுகிறது. சிலவேளைகளில் பெற்றோரின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களைத் தந்துவிடுகிறது. எனவே ஏமாற்றங்களை தவிர்க்கும் விதத்தில் மிகவும் அன்பாகவும், ஆதரவுடனும் பேசிப்பழகி, தங்கள் எதிர்பார்ப்பை பிள்ளைகளின் எதிர்பார்ப்பாக மாற்றுகின்ற கலையை கண்டிப்பாக பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ் பருவத்தினர் சிலருக்கு தனது “ரோல் மாடலாக” யாரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் பிரச்சினைகள் உருவாகிறது. திரைப்படத்தில் சில ஹீரோக்களைப்பார்த்து அவரைப்போல தலைமுடியை அலங்காரம் செய்யவும் உடைகளை உடுத்தவும் பழகிக்கொள்வார்கள். இன்னும் சிலர் விளையாட்டுத் துறையில் சிறந்தவர்களையும், இசையமைப்பாளர்களையும், சில தலைவர்களையும் தங்கள் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, அவர்களைப்போலவே தாங்களும் எதிர்காலத்தில் சிறந்துவிளங்க வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்கள். ஆனால் அந்தத் தலைவர்களுக்குரிய குணங்கள் இவர்களிடம் இல்லாததால் சிலவேளைகளில் இவர்களது செயல்கள் வேடிக்கையாக மற்றவர்களுக்குத் தோன்றவும் வாய்ப்புள்ளது.

இப்படி பல பிரச்சினைகளில் “டீன் ஏஜ்” பருவத்தினர் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களுக்கு சரியான முறையில் வழிகாட்டுதலை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்களுடன் முறையான தகவல்தொடர்பை (இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களது செயல்களைப் பாராட்டப் பழகிக்கொள்ள வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்டவும் முன்வரவேண்டும். அவர்களது பிரச்சினைகளை கூர்ந்து கவனிக்கவும், அதற்கான தீர்வுகளை வழங்கவும் அருகில் இருந்து துணைபுரிய வேண்டும்.

“டீன் ஏஜ்” பருவத்தில் வரும் பிரச்சினைகளை அந்தப் பருவத்தினர் உணர்ந்துகொண்டால் பலவித சிக்கல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது பயணம் மேற்கொள்ளவேண்டிய பாதையைப்பற்றி முதலில் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் அந்தப் பாதையில் மேடு, பள்ளங்கள் எங்கெல்லாம் உள்ளன? என்றும், முட்களும், கற்களும் உள்ள பகுதிகள் எவை? என்றும், தகவலகளை சேகரித்துக்கொள்ள வேண்டும். வேகமாக எவ்வளவுதூரம் பயணம் செல்லலாம்? என்பதைப்பற்றிய நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் பயணம் செய்யும் வாகனம் எப்படிப்பட்டது? என்பதைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சரியானமுறையில் பயணம் செய்ய இயலும்.

இதைப்போலவே “டீன் ஏஜ்” பருவத்தினர் தங்களது 13 – வயதுமுதல் 19 வயது வரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளைப்பற்றி முன்கூட்டியே தௌல்வாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பள்ளமாய் இருக்கும் பகுதியைப்பார்த்து பயணம் செய்யும்போது ஒதுங்கிக் கொள்வதுபோல, சிக்கலில் மாட்டவைக்கும் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம். சிலவேளைகளில் வேறுபாதையில் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளலாம். பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணலாம். இதைத் தவிர்த்து தங்கள் பிரச்சினைகளை தாங்களே அறிய விரும்பாமல் “டீன் ஏஜ்” பருவத்தினர் செயல்பட்டால், “டீன் ஏஜ்” பிரச்சினைகள் அவர்கள் வாழ்வில் பல விபரீதங்களை உருவாக்கிவிடும்.

“டீன் ஏஜ்” பிரச்சினைகளுக்கு சரியான முறையில் தீர்வுகண்டவர்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.

தொடரும்.

0 comments: